திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.96 திருநெல்வெண்ணெய் - திருமுக்கால் பண் - சாதாரி |
நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறுஞ்
சொல்வணம் இடுவது சொல்லே.
|
1 |
நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே.
|
2 |
நிரைவரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
உரைவிரிப் போருயர்ந் தோரே.
|
3 |
நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி உறையவல் லீரே
ஊர்மல்கி உறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே.
|
4 |
நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத் தீரே
ஆடிளம் பாப்பசைத் தீருமை அன்பொடு
பாடுளம் உடையவர் பண்பே.
|
5 |
நெற்றியொர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே.
|
6 |
நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்மடிக் கீழே.
|
7 |
நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீரே
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே.
|
8 |
நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
றிருவரை யிடர்கள்செய் தீரே
இருவரை இடர்கள்செய் தீருமை யிசைவொடு
பரவவல் லார்பழி யிலரே.
|
9 |
நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண்கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே.
|
10 |
நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |